சத்தீஸ்கரில் அமைதியாக நடந்த 2-வது கட்ட தேர்தல்- 75% வாக்கு பதிவு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது. 2ம் கட்ட தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன.
90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. முதல் கட்ட தேர்தல் 18 தொகுதிகளில் கடந்த 11-ந்தேதி நடந்தது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 75.53% வாக்குகள் பதிவாகின.
2-வது இறுதிக்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 80 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டுப்பதிவை கண்காணிக்க 3 ஆயிரம் கேமராக்கள் பொருத்தபட்டிருந்தன.
காலை முதல் நீண்ட வரிசை
ஆண்களும், பெண்களும் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் 10 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டன.
நண்பகலில் 30% வாக்கு பதிவு
நண்பகல் நிலவரப்படி சுமார் 30% வாக்குகள் பதிவாகின. பகல் 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி இருந்தன.
75% வாக்கு பதிவு
வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தது. இறுதி நிலவரப்படி 74.65% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.
டிச.8-ல் வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 8-ந்தேதி நடக்கிறது.