அந்த ஒரு ஒப்பந்தம்.. உயிர் போகும் நிலையிலும் துப்பாக்கியை தூக்காத இந்திய வீரர்கள்.. என்ன காரணம்?
லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் ஏன் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
லடாக்: லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் ஏன் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே நடந்த சண்டை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி வருகிறது. இந்திய தரப்பில் கல்வான் சண்டையில் 20 வீரர்கள் பலியானார்கள். 74 வீரர்கள் மோசமாக காயம் அடைந்தனர்.
சீனா வீரர்கள் மொத்தம் 43 பேர் இதில் பலியானதாக கூறப்படுகிறது. சீனாவின் தரப்பில் இன்னும் பலர் இதில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆயுதம்
இந்த தாக்குதலின் போது சீனாவின் வீரர்கள் மிக மோசமான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். துப்பாக்கிகளுக்கு பதிலாக மிக கூரான கம்பிகள், முற்கள் சுற்றப்பட்ட இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். இந்த ஆயுதங்களை முன்பே தயார் செய்து சீனாவின் வீரர்கள் எல்லையில் ஆக்கிரமிப்புகளை செய்து இருந்தனர். இதனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆயுதம் இருந்ததா
முதலில் இந்த சண்டை நடக்கும் இடத்திற்கு இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று செய்தி வந்தது. அதாவது பேச்சுவார்த்தை என்பதால் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் சீனாவின் வீரர்களை சந்திக்க இந்திய வீரர்கள் சென்றார்கள் என்று செய்திகள் வந்தது. ஆனால் இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த செய்திகள் பொய் என்று கூறினார்.

என்ன விளக்கம்
அதன்படி இந்திய வீரர்கள் முழுமையான ஆயுதத்தோடுதான் சென்றார்கள். இந்திய - சீன ஒப்பந்தத்தின் காரணமாகத்தான் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அது என்ன இந்திய - சீன ஒப்பந்தம் என்று கேட்கலாம். இந்திய வீரர்கள் உயிர் போகும் நிலையில் தாக்கப்பட்டும் கூட துப்பாக்கியை தூக்காமல் இருந்ததற்கு பின் இரண்டு ஒப்பந்தங்கள் காரணமாக இருக்கிறது.

காரணம் என்ன
முதல் ஒப்பந்தம் 1962ல் நடந்த போருக்கு பின் 1972ல் வாய் வழியாக போடப்பட்ட ஒப்பந்தம். அதன்பின் 1993-ம் ஆண்டு முறையாக இரண்டு நாட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாட்டு வீரர்களும் எல்லையில் எதிரி நாட்டு வீரர்களை தூண்டும் விதமாக செயல்பட கூடாது. அதேபோல் உங்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவேன், போர் தொடுப்பேன் என்று கூற கூடாது.

அந்த ஒப்பந்தம்
ஒரு நாட்டின் வீரர்கள் தவறுதலாக அல்லது தெரிந்தே எல்லையை கடந்து சென்றால், அவர்களை தாக்காமல் திரும்ப அனுப்ப வேண்டும். மீண்டும் எல்லையில் சென்று அவர்களை விட வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே இதை சரி செய்ய வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதன்பின் 1996ல் முழுமையான இன்னொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இரண்டாவது ஒப்பந்தம்
அந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் எல்லையில் சின்ன சின்ன சண்டை வந்தால் உடனே படைகளை வாபஸ் பெற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும். எல்லையை சுற்றி 2 கிமீ தூரத்திற்கு இரண்டு நாட்டு ராணுவமும் துப்பாக்கி, குண்டுகள், வெடிபொருட்களை பயன்படுத்த கூடாது. சண்டை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட இரண்டு நாடுகளும் துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது.

ஒரு கேள்வி
இந்த ஒப்பந்தம் காரணமாகத்தான் எல்லையில் துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் குச்சிகளை, கம்புகளை வைத்து இரு நாட்டு வீரர்களும் தாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் உயிர் போகும் அளவிற்கு தாக்கப்பட்ட போதும் கூட ஒப்பந்தத்தை மதித்து வீரர்கள் துப்பாக்கிகளை எடுக்கவில்லை. இதற்கு பின் என்ன காரணம், ஏன் அந்த சூழ்நிலையில் கூட வீரர்கள் துப்பாக்கியை ஏன் எடுக்கவில்லை, ஒப்பந்தம் அவ்வளவு முக்கியமா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications