இறந்தவர்கள் உடலை இனி எரிக்கலாம்– கேரள கிறிஸ்துவ பிஷப்புகள் புதிய முடிவு!
கொச்சி: கேரளாவின் சைரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்த பிஷப்கள் கூடி, இனிமேல் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்குப் பதில் தகனம் செய்யவும் அனுமதிப்பது என்ற முடிவை எடுத்துள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உடல்களை அடக்கம்தான் செய்வார்கள். ஆனால் இனிமேல் உடல்களை தகனம் செய்யவும் அனுமதிக்க பிஷப்கள் முடிவெடுத்துள்ளனர். அதாவது உறவினர்கள் விருப்பப்பட்டால் உடல்களைத் தகனம் செய்யத் தடை இல்லை.
இதற்குமுக்கிய காரணம் கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் இடமின்மையால் தவி்ப்பதுதான். எனவே ஆர்த்தோடாக்ஸ், ஜேக்கபைட், மார்த்தோமா, சர்ச் ஆப் செளத் இந்தியா ஆகியவை இணைந்து கூடி ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து பாதிரியார் பால் தெலகாட் கூறுகையில், "தகனம் செய்வதால் மட்டும் இடப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது. இருப்பினும் இட நெருக்கடியைக் குறைக்க இது சற்று உதவும். மேலும் இரண்டுமே கூட சுற்றுச்சூழலுக்கு பிரச்சினைதான். இருப்பினும் அரசு வழங்கும் இடத்தில் தகனம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க முடியும்" என்றார்.
விதிவிலக்கான சமயங்களில் உடல்களைத் தகனம் செய்ய கேனான் விதியில் முன்னுதாரணங்கள் உள்ளன. கிறிஸ்தவ மதத்தில் அடக்கம்தான் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றாலும் கூட விதி விலக்காக தகனம் செய்யவும் வழி உள்ளது.
ஐரோப்பாவின் வோக் நகரில் கடந்த இரு வருடங்களாக தகனம் அமலில் உள்ளது. அங்கு சவப் பெட்டிகளின் விலை அதிகரித்ததால் இந்த முடிவை எடுத்துள்ளனர். கேரளாவிலும் கூட கடந்த காலங்களில் தகனம் நடந்துள்ளது.
எப்படி இருந்தாலும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விரோதமான முறையில் இறுதிச் சடங்குகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று சர்ச்சுகள் கூறியுள்ளன.