நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு மாற்றம்
நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி: சிபிஐ நீதிபதி பிரிஜ்பால் லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. திங்கட்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு முதல்வராக நரேந்திரமோடி இருந்த போது அங்கு உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார். ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் 2005ம் ஆண்டு நவம்பர் 26ஆம்தேதி அகமதாபாதிற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த போலி என்கவுன்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்து வந்தபோது நீதிபதி லோயா கடுமையாக கண்டித்தார்.
போலி என்கவுண்டர் வழக்கில் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லோதா டிசம்பர் 1ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். நாக்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
லோயாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி எம்.பி.கோசவி அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
லோயவின் மரணம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மும்பையைச் சேர்ந்த செய்தியாளர் பி.ஆர். லோன், காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சந்தானகவுடர் தலைமையிலான அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மஹாராஷ்டிரா அரசு நீதிபதி மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 15ஆம்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் மனுதாரர்களுக்கும் இந்த ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும் அவர்களுக்கு நீதிபதி மரணம் தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிந்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் கடந்த 12ஆம் தேதி எப்போதும் இல்லாத வகையில் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.
அதில் முக்கியமான குற்றச்சாட்டு சி.பி.ஐ. நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான சிறிய அமர்வுக்கு மாற்றியது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற வழக்குகளை கொலிஜியம் அமைப்பில் உள்ள மூத்த நீதிபதிகள் அமர்வுக்கே மாற்றி இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான பொது நலன் வழக்குகளை உச்ச நீதிபதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு வரும் திங்கள்கிழமை விசாரிக்கும் என இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications