நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வந்தது.
விதிமுறைகள் மீறல்
கடந்த மாதம் 25-ந்தேதி அன்று நீதிபதிகள் அளித்த இடைக்கால தீர்ப்பில், 1993-ம் ஆண்டில் இருந்து 2010-ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஒதுக்கீடுகள் பாரபட்சமாகவும் வெளிப்படைத் தன்மையற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளன என்றும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டனர்.
சட்டவிரோதமானவை
1992-ம் ஆண்டு முதல் நிலக்கரி ஒதுக்கீடு குறித்த தேர்வுக்குழுவின் 36 கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அனைத்து நிலக்கரி ஒதுக்கீடுகளையும் சட்டவிரோதமானவை என்றும் பாரபட்சமுள்ளவை என்றும் அறிவித்தது.
நிறுவனங்கள் மனு
இதனிடையே நிலக்கரி சுரங்க உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தன.
மத்திய அரசு புதிய மனு
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.அந்த மனுவில் கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2010-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த 218 சுரங்கங்களின் உரிமங்களில் 46 உரிமங்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.
இந்த 46 சுரங்கங்களில் தற்போது 40 சுரங்கங்கள் நிலக்கரியை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் 6 சுரங்கங்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன என்று கூறப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.