”அடிக்குது குளிரு...” – கொட்டும் பனியால் போர்வைக்குள் முடங்கிய டெல்லிவாலாக்கள்!
டெல்லி: டெல்லியில் இன்று காலை முதலே நிலவிய கடும் பனிமூட்டத்தால் டெல்லி வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 16 விமானங்கள் மற்றும் 50 ரயில்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், இரு விமானங்களின் பயணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதே போல் 12 ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமே 15தான்:
ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அங்கு பதிவானது.
வானிலை ஆய்வு மையம் கணிப்பு:
இன்று அதிகபட்சமாக 16 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும், குறைந்த பட்சமாக 5 டிகிரி வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளிருக்கு நான்கு பேர் பலி:
நாட்டின் வடக்கு பிரதேசத்தில் நிலவும் கடும் குளிரால் ஞாயிறன்று உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும், தலைநகர் டெல்லியில் மூச்சுத்திணறி மூவரும் பலியானார்கள்.
வந்துருச்சு சில்லாய் கலன்:
ஜம்மு காஷ்மீரில் "சில்லாய்கலன்" எனும் 40 நாள் மிகக்கடுமையான பனிக்காலம் நேற்று துவங்கியது. இதன் மூலம் அங்கு முதல் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
ஸ்ரீநகரில் பரவாயில்லை:
அதே சமயம் ஸ்ரீ நகரில் நேற்று முன்தினம் -4.4 டிகிரியாக இருந்த குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று சற்று குறைந்து -1.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.