பா.ஜ.க.வில் இருந்து சஸ்பென்ட்... கீர்த்தி ஆசாத்துக்கு காங். வலை.. கட்சியில் சேர அழைப்பு!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பா.ஜ.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷகீல் அகமது அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றது என்பது புகார். இது தொடர்பாக டெல்லி மாநில அரசு ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது.
அதேபோல் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. கீர்த்தி ஆசாத்தும் அருண் ஜேட்லி மீதான ஏராளமான ஊழல் புகார்களை முன்வைத்திருந்தார். இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது கீர்த்தி ஆசாத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்டோர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கீர்த்தி ஆசாத்தை தங்களது கட்சிகளில் சேர்ப்பதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது கூறுகையில், ஊழல்களை அம்பலப்படுத்துகிற கீர்த்தி ஆசாத் இருக்க வேண்டிய இடம் பா.ஜ.க. அல்ல.
அவர் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். ஆகையால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என்றார். நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட போது அவர்களுடன் கை கோர்த்தவர் கீர்த்தி ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.,