மக்களின் தீர்ப்பை பணத்தால் பாஜக திருடிவிட்டது... கோவா, மணிப்பூர் நிலவரம் பற்றி ராகுல்காந்தி விளாசல்
பணம் மற்றும் அதிகார பலத்தை வைத்து மக்களின் தீர்ப்பை பாஜக திருடிவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்
டெல்லி: பணம் மற்றும் அதிகார பலத்தை வைத்து மக்களின் தீர்ப்பை பாஜக திருடிவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்
உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி ஏற்பட்டது. மேலும் இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரசை விட குறைந்த தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருந்தது.
மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. ஆனால் பாஜக சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று கோவாவில் ஆட்சி அமைத்தது. அதேபோல் மணிப்பூரிலும் இன்று ஆட்சியமைக்க உள்ளது
இந்நிலையில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் முதன்முறையாக நேற்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது இயல்புதான். உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
காங்கிரஸ் கட்சியால் பஞ்சாப் மாநிலம் உயர்வை சந்திக்கும். கோவா மாநில கவர்னர் ஒரு தலைபட்சமாக நடந்துகொண்டார். நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரும் முன்பே அம்மாநில கவர்னர், மனோகர் பாரிக்கருக்கு ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை கொடுத்துவிட்டார். உத்தரபிரதேசத்தில் மக்களை பிளவுப்படுத்தியதால் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
எங்களின் சித்தாந்தம் பாஜகவுக்கு எதிரானது. மேலும் கோவா , மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் தனது பணம் மற்றும் அதிகார பலத்தின் மூலம் ஜனநாயகம் நசுக்கப்பட்டு, மக்களின் தீர்ப்பை பாஜக திருடுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.