"மேக் இன் இந்தியா" இல்லை, "டேக் இன் இந்தியா".. மோடியைத் தாக்கிய ராகுல்
டெல்லி: டெல்லியில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை கடுமையாக சாடினார். இது மேக் இன் இந்தியா இல்லை. டேக் இன் இந்தியா என்று அவர் விமர்சித்தார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பேசியபோது, மேக் இன் இந்தியா என்று கூறுகிறார்கள். உண்மையில் இது டேக் இன் இந்தியா.. டேக் பிரம் இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த திட்டத்தால் பிரதமரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் சிலருக்கே பலன் கிடைக்கும். மக்களுக்கு ஒரு பலனும் கிடைக்காது. மக்கள் இழப்பதுதான் மிச்சமாகும்.
இங்கு தொழிலாளர்களுக்கு இடமில்லை. விவசாயிகளுக்கு இடமில்லை. அவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டு பின்வாங்கியது காங்கிரஸின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெர்றி. காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின் தீவிரத்தை உணராமல் தனது கையை சுட்டுக் கொண்டுள்ளது மோடி அரசு.
ஆனால் எங்களது போராட்டத்தால் மக்கள் விழிப்படைந்ததைப் பார்த்த பிறகே உண்மையை உணர்ந்தது. தற்போது தேசிய அளவில் இந்தப் போராட்டத்தை மாநிலங்களுக்கும் கொண்டு சென்றுள்ளோம் என்றார் ராகுல் காந்தி.
இதே கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், மோடி அரசு பதவிக்கு வந்தது முதலே விவசாயிகளுக்குப் பிரச்சினைதான். வறட்சி, பாசன நீர், மின்சாரம் என எல்லாமே பிரச்சினைதான். இவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மோடி அரசுக்கு எண்ணமில்லை என்றார் அவர்.