உ..பி.யில் காங்.க்கு 4 இடம்தானாம்! பாஜக- 30, பகுஜன் -24 சமாஜ்வாடி- 20.. இந்தியா டுடே சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் எந்த அரசு அமையும் என்பதை தீர்மானிக்கக் கூடிய உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸுக்கு 4 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு. பாரதிய ஜனதாவுக்கு இம்மாநிலத்தில் 30 தொகுதிகள் கிடைக்குமாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்டது இம்மாநிலம்தான்.
இந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவைதான் செல்வாக்குள்ள கட்சிகள். ஆனால் லோக்சபா தேர்தல் குறித்து இந்தியா டுடே- சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸூக்கு 4 இடம்தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுதோல்வியை சந்திக்கும் காங்..
2009ஆம் ஆண்டு தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை வெறும் 4 இடம்தான் கிடைக்குமாம்..
பாஜகவுக்கு ஏற்றம்
2009 தேர்தலில் 10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்த பாரதிய ஜனதாவுக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் 30 தொகுதிகள் கிடைக்குமாம்.
பகுஜனுக்கு 24
2009 தேர்தலில் 20 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை 24 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு
சமாஜ்வாடிக்கு இறங்குமுகம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி, 2009 தேர்தலில் 24 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. தற்போது 20 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம்.