மேற்கு வங்கத்தில் அமைச்சரை வரவேற்காத மாணவர் அடித்துக்கொலை- எதிர்கட்சியினர் பந்த்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் அமைச்சரை வரவேற்காத மாணவரை ஆளும் கட்சியினர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சபாங்கில் உள்ள கல்லூரியில் அமைச்சர் சவுமன் மகாபத்ராவை வரவேற்பது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சரை அனைத்து மாணவர்களும் வரவேற்க வேண்டும் என ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் மாணவர் அணியை சேர்ந்த மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரும்பு கம்பிகள், உருட்டு கட்டைகளுடன் திரிணாமூல் காங்கிரசார் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர் கொலையை கண்டித்து மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில் மாணவர் கொலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மாணவர் அணியினர் தான் கல்லூரியில் போராட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.