பரபரப்பு.. காங். 2 எம்எல்ஏக்கள் மாயம்.. தனி விமானம் அனுப்பி அபேஸ் செய்த ரெட்டி சகோதரர்கள்!
Recommended Video

பெங்களூர்: காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனிடையே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என ஸ்ரீராமலு அறிவித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
பாஜக தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக ஸ்ரீராமலு அறிவிப்பு வெளியிட்டார். பாஜக எம்எல்ஏவாகியுள்ள ஸ்ரீராமலு ரெட்டி சகோதரர்களுக்கு உற்ற நண்பன் என்பது கவனிக்கத்தக்கது.

பெல்லாரி மாவட்டம்
ஆனந்த் சிங், ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் கொண்ட பெல்லாரி மாவட்டத்தின் விஜயநகர் தொகுதியில் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராகும். ஆனால் தொங்கு சட்டசபை அமைந்தது முதலே, ஆனந்த்சிங்கை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் இதை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார்.

மிரட்டல்
இதனிடையே மஜத தலைவர் குமாரசாமி இன்று அளித்த பேட்டியில், ஆனந்த்சிங்கை பாஜக தலைமை மிரட்டி வைத்துள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளை கொண்டு மிரட்டி வைத்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், ஆனந்த்சிங் மட்டுமல்ல, மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் மாயமாகியுள்ளார்.

விமானத்தில் மாயம்
ராய்ச்சூர் மாவட்டம், மாஸ்கி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதாப் கவுடா பாட்டீல், என்ற எம்எல்ஏவும் மாயமாகியுள்ளார். அவர் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பெயர் வெளியாகாத ஏதோ ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது, ரெட்டி சகோதரர்களில் ஒருவரான சோமசேகர ரெட்டி என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏழை எம்எல்ஏ
63 வயதாகும் பிரதாப் கவுடா பாட்டீல், கர்நாடகாவின் ஏழ்மையான எம்எல்ஏ என பெயர் பெற்றவர். 2013ல் தனது சொத்து மதிப்பு ரூ.40 லட்சம் என்றுதான் பிரதாப் கவுடா பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே எடியூரப்பா அளித்த பேட்டியில், 24 எம்எல்ஏக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்களிக்க உள்ளனர் என்று தெரிவித்ததையும், இதுபோன்ற நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications