எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்காவிட்டால் காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்: கமல்நாத்
டெல்லி: எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு தராவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் காங்கிரஸுக்கு 44 சீட்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான கமல்நாத் கூறுகையில்,
லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற அவையின் மொத்த உறுப்பினர்களின் 10 சதவீதம் பேரை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி இல்லை. சபாநாயகர் பாஜகவை சேர்ந்தவர் என்று எங்களுக்கு தெரியும். அவர் ஒரு அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முடிவு பாஜக மற்றும் மோடியின் கருத்துபடி இருக்கலாம். அதற்காக நான் சபாநாயகர் சிலரின் பேச்சை கேட்டு நடக்கிறார் என்று கூறவில்லை.
காங்கிரஸுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வது தான் சரியானது என்றார்.
ஆனால் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
சபாநாயகரின் முடிவை மதிக்க வேண்டும். நேருஜி காலத்திலும், இந்திரா காந்தியின் காலத்திலும் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஏன் ராஜீவ் காந்தியின் காலத்திலும் கூட எதிர்கட்சி தலைவர் இல்லை என்றார்.