ஆளுநர் ரோசைய்யாவின் உறவினரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 ஆப்பிரிக்கர்கள்
பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் உறவினர் ராஜன் குமாரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த ஆப்பிரிக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் உறவினர் ராஜன் குமார் என்கிற ராஜு(62). நகைக்கடைகள் வைத்துள்ளார். அவருக்கு பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வீடுகள் உள்ளன. ராஜன் குமார் சுத்தம் செய்யப்படாத தங்கம் வாங்க விரும்புவதாக ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டார்.
அந்த விளம்பரத்தை பார்த்த பெங்களூரில் வசிக்கும் கானாவை சேர்ந்த மரியோ கோமெஸ் அப்பாயா(35) மற்றும் நமிபியாவை சேர்ந்த ஃபோஃபோ ஜார்ஜ் மார்ஜ்(35) ராஜுவை ஏமாற்ற திட்டம் தீட்டினர்.
தங்கம் தொடர்பாக அவர்கள் ராஜுவை சந்தித்து பேசினர். காலப்போக்கில் அவர்கள் ராஜுவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர். அந்த இருவரும் ராஜுவை அப்பா என்று அழைக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமாகிவிட்டனர். ராஜுவிடம் சந்தையில் இருப்பதை விட குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஒரு நாள் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை ராஜுவிடம் அளித்து இதை உங்கள் வீட்டில் வைத்திருங்கள், ஹோட்டல் அறையில் வைக்க பயமாக உள்ளது என்று கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜுவின் நம்பிக்கையை பெற்றுவிட்டனர்.
அதன் பிறகு ராஜு அவர்களிடம் தங்கம் வாங்க வைத்துள்ள ரூ. 55 லட்சம் அடங்கிய பாக்கெட்டை காண்பித்தார். அவர்கள் ராஜுவுக்கு தெரியாமல் அந்த பணத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கள்ளநோட்டை வைத்துவிட்டனர். அவர்கள் முன்னதாக ராஜுவிடம் கொடுத்து வைத்த ரூ.3. 3 லட்சமும் கள்ளநோட்டுகள் தான்.
கள்ளநோட்டுகள் பற்றி அறிந்த ராஜு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரை அந்த இருவருடனும் வழக்கம் போன்று பழகி பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைக்குமாறு கூற அவரும் அப்படியே செய்தார்.
ஹோட்டலுக்கு வந்த அந்த இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹவாலா மூலம் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப கொடுத்து வைத்திருந்த ரூ.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜுவின் பணத்தில் ரூ.5 லட்சத்தை அவர்கள் செலவு செய்துவிட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இருவரையும் கைது செய்தனர்.