மேற்குவங்க தேர்தல் தோல்விக்கு இதான் காரணம்! கொரோனா மீது பழிபோட்ட பாஜக ஜேபி நட்டா! பரபர பேச்சு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்விக்கு கொரோனா பரவல் தான் காரணம் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 8 கட்டங்களாக மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று - என்ன வகை என ஆய்வு
மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
பாஜக 77 இடங்களில் வெற்றி
இதன்மூலம் மம்தா பானர்ஜி 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை.
நீடிக்கும் வார்த்தைப்போர்
இந்நிலையில் தொடர்ந்து பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
கொரோனா தான் காரணம்
அப்போது கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஏஏன் தோற்றது என்பது பற்றி அவர் விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. 4ம் கட்ட தேர்தலின்போது கொரோனா 2ம் அலை பாதிக்க தொடங்கியது. இதனால் பாஜகவால் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை. கொரோனா பரவாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவான அலை இருந்தது. ஆனால் 4ம் கட்ட தேர்தலுக்கு பிறகு பிரசாரம் மேற்கொள்ளாமல் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது. இது தேர்தல் முடிவை மாற்றிவிட்டது.
அடுத்த முறை வெற்றி
எனவே அடுத்த முறை மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி கொல்கத்தாவில் வெற்றி பேரணியை நடத்துவோம். மேலும் மேற்கு வங்கத்தின் பெருமையை சீர்குலைப்பவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்குவதை பாஜக செய்யும். ஜனநாயக ரீதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக நிச்சயம் வெல்லும். எனக்கு வரவேற்பு அளிக்க கூடிய கூட்டம் இதனை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது'' என்றார்.
குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்
முன்னதாக அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரச்சனை அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.