எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி "சுளீர்"
ஜெய்ப்பூர்: "எனது நடைப்பயணத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதை பார்த்து மத்திய பாஜக அரசுக்கு பயம் வந்துவிட்டது" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எனது இந்த யாத்திரையை தடுக்க பல வேலைகளை செய்தும் பலனிக்காததால், தற்போது கொரோனா வைரஸை ஒரு சாக்குபோக்காக மத்திய அரசு கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ராகுலே நேரடியாக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.

100 நாட்களை நிறைவு செய்த யாத்திரை
நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதாக கூறி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கிய நடைப்பயணம் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. தற்போது அவர் ராஜஸ்தானில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

"நடைப்பயணத்தை ரத்து செய்யுங்கள்"
இதனிடையே, சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். அதில், "கொரோனா பரவும் சூழல் இந்தியாவில் எழுந்திருக்கிறது. இந்த சமயத்தில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயணம் மேற்கொள்வது வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைப்பயணம் செல்லுங்கள் அல்லது நடைப்பயணத்தை ரத்து செய்யுங்கள்" என மன்சுக் மாண்டவியா கூறியிருந்தார்.

காங்கிரஸ், சிவசேனா கண்டனம்
சுகாதாரத் துறை அமைச்சரின் இந்தக் கடிதத்துக்கு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு சதி செய்கிறது. இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியே, கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை" என குற்றம்சாட்டினார். அதேபோல, சிவசேனா கட்சி (உத்தவ் அணி) வெளியிட்ட அறிக்கையிலும், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தடுப்பதற்காகவே கொரோனாவை மத்திய அரசு பரப்புவது போல இருக்கிறது என விமர்சிக்கப்பட்டது.

"கொரோனா ஒரு சாக்கு"
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தற்போது நேரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காஷ்மீர் வரை எனது நடைப்பயணம் செல்லும். இப்போது அவர்கள் (பாஜக) எனது யாத்திரையை தடுக்க புதிய சாக்குபோக்குகளை கண்டுபிடிக்க தொடங்கிவிட்டனர். அதில் ஒன்றுதான் கொரோனா. எனது நடைப்பயணத்தின் போது வெளிப்பட்ட நாட்டின் வலிமையையும், உண்மையைும் கண்டு அவர்கள் பயந்துவிட்டனர்" என்றார்.












Click it and Unblock the Notifications