இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு பரிசீலனை: மனோகர் பாரிக்கர்
டெல்லி: இளைஞர்களுக்கு சில வகையான ராணுவப் பயிற்சிகளை அளிக்க பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 14-15 வயதுடையோருக்கு ஓராண்டு ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்கக் கோரும் தனிநபர் தீர்மானம் ஒன்றை பா.ஜ.க. எம்.பி. அவினாஷ் ராய் கன்னா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
இந்த தனிநபர் மசோதா மீதான விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: 'இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை எல்லைப் பகுதிகளையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் வெள்ளோட்ட அடிப்படையில், தொடங்கலாம்.
இதன்படி, பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் தினந்தோறும் ஒரு மணிநேரம் அல்லது தனிப் பாடமாக ராணுவப் பயிற்சியை அளிக்கலாம். எம்.பி.க்களைக் கலந்தாலோசித்த பின், இது தொடர்பான திட்டம் அடுத்த சில மாதங்களில் உருவாக்கப்படும். இந்தத் தனி நபர் மசோதாவை, எதிர்க்கட்சி வரிசையில் நான் இருந்திருந்தால் உடனே ஆதரித்திருப்பேன். ஆனால், நான் ஆளும் தரப்பில் இருக்கிறேன். எனினும், இந்த மசோதாவின் நோக்கத்தை ஆதரிக்கிறேன்.
இந்த மசோதா கூறும் யோசனை நன்றாகவே உள்ளது. ஆனால், 14-15 வயதுடையோருக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிப்பது என்பது சாத்தியம் இல்லாததாகும். ஏனென்றால், இந்த வயதுடைய 16 கோடி இளைஞர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் பாதி பேர் பயிற்சிக்குத் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டால், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆண்டுதோறும் ரூ.60,000 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.