அஜய் மக்கான் பெயரில் போலி கடிதம் தயாரித்த வழக்கு- ஜெகதீஷ் டைட்லருக்கு கோர்ட் ஜாமீன்!
ஆயுத தரகர் அபிஷேக் வர்மாவுக்கும் அவரது கூட்டாளி எட்மண்ட் எல்லனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அப்போது அபிஷேக் தொடர்பான பல ஆவணங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், சிபிஐ-க்கும் எட்மண்ட் அனுப்பிவைத்தார்.
அதில், அஜய் மக்கானின் பெயரிலான கடிதமும் ஒன்று. அதாவது 2009-ம் ஆண்டு சீனத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு விசா விதிமுறைகளிலிருந்து சலுகை பெற்றுத் தருவதற்காக அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் பெயரில், பிரதமருக்கு கடிதம் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் தாம் அப்படி ஒரு கடிதமே கொடுக்கவில்லை என்று அஜய் மக்கான் மறுத்துவிட்டதுடன் புகாரும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அபிஷேக் வர்மா மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அபிஷேக் வர்மா போலி கடிதம் தயாரிக்க உதவியதாக ஜெகதீஷ் டைட்லர் பெயர் கூறப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஜெகதீஷின் பெயர் இடம் பெறவில்லை.
இதனால் ஜெகதீஷ் டைட்லர் தாக்கல் தமக்கு ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது டைட்லருக்கு ஜாமீன் தர சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
பின்னர் டைட்லருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.