கொரோனாவை உருவாக்கியது கடவுளோட சூப்பர் கம்யூட்டராம்... சொல்வது அசாம் அமைச்சர்
கொரோனாவை உருவாக்கியது கடவுளின் சூப்பர் கம்யூட்டர் என்று கூறியுள்ளார் அசாம் மாநில அமைச்சர் ஒருவர். இந்த தொற்று யாரை தாக்க வேண்டும் என்று அந்த கம்யூட்டர்தான் முடிவு செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
குவஹாத்தி: கொரோனா வைரஸ் என்ற கொடுந்தொற்று மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் அது கடவுளின் சூப்பர் கம்யூட்டர் உருவாக்கியது என்றும் கூறியுள்ளார் அசாம் மாநில அமைச்சர். கொரோனா யாரை பாதிக்க வேண்டும் என்று அந்த கம்யூட்டர்தான் முடிவு செய்கிறது என்றும் பேசியுள்ளார் அந்த அமைச்சர்.
கொரோனா வைரஸ் உலக மக்களில் 22 கோடி பேரை பாதித்துள்ளது. 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20 கோடி மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி போடும் பணி, தற்போது மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முக்கியமாக பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவில் நேற்று, அதாவது ஆக்ஸ்ட் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 60,07,654 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 23,36,159 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், இன்று வரை முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,91,48,993. இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 14,17,94,587 என்ற அளவில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை உருவாக்கியது கடவுளின் கம்யூட்டர் என்று கூறியுள்ளார் அசாம் மாநில அமைச்சர் சந்திரமோகன் படோவாரி. கொரோனாவால் கணவனை பறிகொடுத்த பெண்கள் மத்தியில் பேசிய அந்த அமைச்சர், கொரோனாவால் யார் பாதிக்கப்படுவார்கள், யார் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த உலகத்தில் இருந்து யார் எடுத்துச்செல்வார்கள் என்பதை இயற்கை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கொரோனா பாதித்து இறந்துள்ளனர். தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதால் மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அமைச்சர்.
WHO போன்ற அமைப்பு ஏன் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க தவறிவிட்டது. டிப்டாப் விரிவுரைகள் வழங்கும் விஞ்ஞானிகள் எங்கே என்று கேட்ட அவர், கொரோனாவில் இருந்து நிவாரணம் அளிக்கும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் தோல்வி அடைந்துள்ளது என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், மாடுகளைப் பராமரிக்கும் கோசாலைக்குள் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து, பசு மாட்டுப் பால், கோமியம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள். மாடுகளைப் பராமரிக்கும் இடமான கோசாலையை, இப்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளில் பசு மாட்டின் வறட்டியை சாப்பிட்டு சிறுநீரையும் குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கூறி பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பா.ஜ.க பிரமுகர்களே கொரோனா குணமடைய பசு மாட்டு சிறுநீரைக் குடியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அகமதாபாத்தில், மாட்டு சாண தெரபி என்ற பெயரில் உடல் முழுக்க சாணத்தைப் பூசிக்கொண்டு, சிலர் சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் இப்போது கடவுளின் கம்யூட்டர் அனுப்பியதுதான் கொரோனா வைரஸ் என்று கூறியுள்ளார் அசாம் மாநில அமைச்சர் சந்திரமோகன் படோவாரி.












Click it and Unblock the Notifications