விவசாயிகளைப் போலவே மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் கடன் அட்டை.. பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்து உள்ளார்.
Recommended Video
டெல்லி: விவசாயிகளுக்குத் தருவது போலவே மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் கடன் அட்டை வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று 2018-19ம் ஆண்டிற்காக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில், நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதாலேயே அதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இயற்கை வேளாண்மை முறையை ஊக்கப்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மூங்கில் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும். மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் ரூபாய் 1200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் பொருட்களை பதப்படுத்தும் தொழிலுக்கும் 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மீன் வள மேம்பாடு மற்றும் கால்நடை பெருக்கத் திட்டத்திற்கு 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை மீனவர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.