ஆந்திரா: தனியார் பேருந்தில் ரூ.8 கோடி பறிமுதல்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் தனியார் பேருந்தை நிறுத்தி போலிசார் நடத்திய சோதனையில் 8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
ஆந்திர மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 4.45 மணிக்கு, ஷம்ஷாபாத் என்னும் இடத்தில், தனியார் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஏழு கோணி பைகளில் இருந்த 8 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். கோணி பையில் பணத்தை எடுத்து வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இந்த பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக தர அல்லது ஹவாலா பரிவர்த்தணைக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய பறிமுதலாக தனியார் பேருந்து ஒன்றில் ரூ.8 கோடியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பார்த்தசாரதியின் மனைவியிடமிருந்து ரூ.45 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.