வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஓகி- குஜராத்தை தாக்காது
ஓகி புயல் மீண்டும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் புயலின் தாக்கத்தில் இருந்து சூரத் நகரம் தப்பியுள்ளது.
அகமதாபாத்: ஓகி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டதால் புயல் தாக்கத்தில் இருந்து சூரத் தப்பி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஓகி புயல் நெருங்கியதன் காரணமாக குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் மழை பெய்தது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தாக்கியதில் தென் தமிழகத்தில் உள்ள குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் சேதமடைந்தன.
அரபிக்கடலுக்கு சென்ற ஓகி லட்சத்தீவுகளில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓகி சூரத்தை நோக்கி நேற்று நகரந்தது.
சூரத்தை தாக்கப்போன ஓகி
குஜராத்தின் சூரத்தில் இருந்து சுமார் 390 கி.மீ. தூரத்தில் ஓகி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. தெற்கு குஜராத் - மகராஷ்டிரா இடையே சூரத் அருகே அதிகாலையில் கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
கனமழை, புயல்
ஓகி மையம் கொண்டதால் தாக்கத்தினால் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்துக்கு காற்றுவீசும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதனிடையே ஓகி புயல் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் நேற்று முன்தினம் முதல் மும்பையிலும் மகாராஷ்டிராவின் கொங்கன் பிாராந்தியத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.
மெதுவாக நகரும் ஓகி
நேற்றிரவு நிலவரப்படி ஓகி புயல் சூரத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் அது மெதுவாக நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை, தானே, உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மழை
ஓகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தாலும் மும்பை நகரில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் குறைந்தது 20 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.