“ஜெர்க்” கொடுக்கும் ஜெகன்மோகன் அறிவிப்பு.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு - ரூ.120 கோடியில் “மெகா” ப்ளான்
அமராவதி: பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து இருக்கிறார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்து இருக்கும் குப்பம் தொகுதிக்கு நேற்று ஒருநாள் பயணமாக வருகை தந்தார்.
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 33 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதியான இங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, அவரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சந்திரபாபு நாயுடு
அவர் தனது உரையில், "மத்திய அரசு தன்னுடைய பேச்சை கேட்டு நடப்பதாக சந்திரபாபு நாயுடு பெருமை பேசி வருகிறார். ஆனால், அவருடைய சொந்த தொகுதியிலேயே சாலை வசதி, குடிநீர் வசதி, பாசன தண்ணீர் போன்றவரை இல்லை. இந்த சூழலில் குப்பம் பகுதிக்கு விமான நிலையம் கொண்டு வருவேன் என்று வேறு மக்களை ஏமாற்றி வருகிறார்.

அரசின் திட்டங்கள்
கடந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு 4 திட்டங்களின் மூலமாக நிதியுதவி வழங்கி இருக்கிறோம். வரும் 20214 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித் தொகை ரூ.2,750 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாலாற்றில் தடுப்பணை
ஹந்திரி - நீவா குடிநீர் கால்வாய் பணிகள் பல ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. இந்த பணிகளை 6 மாதங்களில் பூர்த்தி செய்வோம். யாமிகானிபல்லி மற்றும் மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்ட உள்ளோம். குப்பம் பகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற உள்ளன.

அதிர்ச்சி தகவல்
ஆந்திராவிலிருந்து வரும் பாலாறு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக பாலாறு தண்ணீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து வருவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications