ரபேல் புயல்.. ஹாலண்டே பேட்டிக்கு நேர் எதிராக இந்தியா, பிரான்ஸ் மறுப்பு அறிக்கை!
Recommended Video
டெல்லி: ரபேல் விமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, பிரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது, என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியால் இந்தியாவில் பெரும் அரசியல் புயலே வீசி வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களின் பங்குதாரரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை தீர்மானிப்பதில், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் நாட்டின் பங்களிப்பு கிடையாது, டஸ்ஸால்ட் ( Dassault Aviation) கம்பெனி மட்டுமே தனது பங்குதாரரை தீர்மானித்துக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டஸ்ஸால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் எங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. நாங்கள் தான் ரிலையன்ஸ் குழுமத்தினை தேர்ந்தெடுத்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்திய அரசு ரிலையன்ஸ் குழுமத்தை மட்டுமே பரிந்துரை செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டு, அம்பானி குழுமத்திற்கு உதவி செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியா-பிரான்ஸ் நாட்டுக்கு நடுவே நடந்த ரபேல் ஒப்பந்தத்தில், எந்த ஒரு நிறுவனத்தையும் மத்திய அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலண்டின் பேட்டியில் இருந்து, இந்த அறிக்கைகள் அனைத்தும் மாறுபட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.