திலீப் கைது.. ஆணாதிக்க மலையாள திரையுலகில் நடந்த அதிசயம்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நடைபெற்ற அதிசயம்தான் திலீப் கைது என விவரித்துள்ளார் 'Women in Cinema Collective,'அமைப்பாளர் தீதி தாமோதரன்.
இதுகுறித்து மனோரமாவில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம்: முன்னணி மலையாள நடிகை மீது பிப்ரவரி மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு 'அம்மா' (மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம்) காட்டிய எதிர்வினை என்பது (முதலில் காட்டிய மெத்தனம்) எதிர்பார்த்ததுதான். இந்த உலகம்-அவர்கள் பணியாற்றும் உலகம், ஆண்கள் ஆதிக்கம் மிக்கது அவரவர் ராஜ்யத்தில் அவர்கள் டான்கள்.
வாழ்க்கையின் பிற துறைகளை போலவே சினிமாத்துறை என்பதும் ஆணாதிக்கம் மிக்கது. ஒரு நடிகைக்கு அநீதி இழைக்கப்படும்போது, அநீதியாளர்கள் மீது என்றுமே நடவடிக்கை எடுத்ததில்லை. ஏனெனில், அவர்கள், இதையெல்லாம் ஒரு குற்றமாகவே கருதுவது இல்லை.
மீண்டும் அதிகாரம்
இதுநாள் வரை 'அம்மா' எடுத்த நிலைப்பாட்டுக்காக அது கலைக்கப்படுமா? கண்டிப்பாக இருக்காது! அப்படி நம்ப முடியாது என்பதற்கு போதிய அளவுக்கு அனுபவங்கள் உள்ளன. மிக மோசமான குற்றங்களில் தொடர்புள்ள விஐபிகளுக்கு இதற்கு முன்பு, என்னவானது பாருங்கள்? நாம் வாக்களித்து அவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
நடைபெறாத சம்பவம்
திலீப் தவறு செய்துள்ளார் என்று நாம் இப்போதே உறுதியிட்டு கூற முடியாதுதான். ஆனால், இதுபோன்ற பிம்பத்திலுள்ள ஒருவர் மீது இதுவரை யாரும் விரல் நீட்டியது கிடையாது. கேரளாவின் வரலாற்றில் இது முன் எப்போதும் நடைபெறாதது. அவர் குற்றத்தில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை கோர்ட் முடிவு செய்யட்டும். ஆனால், சினிமாத்துறை பெண்களுக்கு இந்த கைது இது முக்கிய தருணம். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.
தைரியம்
இந்த வழக்கில் அந்த நடிகை-நம் அனைவராலும் அறியப்படுபவர்-முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளார். ரொம்ப தைரியமான முடிவு என்றே கூறலாம். லைம்லைட்டிலுள்ள பெண்கள் பொதுவாக இதுபோன்ற புகார்களை கொடுக்க முன்வருவதில்லை. அதிலும், திருமணமாக உள்ள நிலையில். பெரும்பாலானோர் தங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ரணத்தை மறைக்கவே முயன்றிருப்பர்.
விவரிக்க வேண்டிய கொடூரம்
இது பிற புகார்களை போன்று சாதாரணமானது இல்லை. தான் சந்தித்த கொடூர அனுபவத்தை தனது வாயாலேயே விவரித்து சொல்ல வேண்டிய நிலையிலுள்ள வழக்கு இது. ஆனால் தனது முகத்தை அவர் மறைக்கவில்லை, பதிலாக, பொதுவெளிக்கு வந்து, சட்டத்தின் முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். தைரியமான முடிவு இது. இது எங்களுக்கு அவரோடு இணைந்து நின்று போராட தைரியம் கொடுத்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது!
அதிசயம்
நான் ‘Women in Cinema Collective,' அமைப்பை தொடங்கியபோது, பலரும் கேலி செய்தனர். இதனால் என்ன பலன், சென்று முதல்வரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியும், அவ்வளவுதான் என கூறினர். ஆனால் திலீப் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்தபோது, கேரளாவில் ஏதோ அதிசயம் நிகழ்ந்துவிட்டது என்பதை போல உணர்ந்தேன். மலையாளி பெண்ணுக்கு இது வழக்கத்திற்கு மாறானது.
விலகமாட்டார்
கைது செய்யப்பட்ட நபர் அவரது திரைப்படங்கள் மூலம் ஆராதிக்கப்பட்டவர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர். நேற்றுவரை பல குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு பெண் எதிர்த்து நிற்கிறார். அதேநேரம், திலீப் இந்த சம்பவத்தால், சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்றும் நான் நினைக்கவில்லை.
நன்றி: தீதி தாமோதரன்- மனோரமா