ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.. பிவாண்டி கோர்ட்டில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜரானார்.
மும்பை: காந்தி கொலை தொடர்பாக அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆஜரானார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2014ம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றனர் என்று பேசினார். இதுதொடர்பாக பிவாந்தி நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குந்தே, ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜராக கூறிய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிவாண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வந்தார். இன்று காலை 10 மணியளவில் கோர்ட்டில் ஆஜரானார். இதனையடுத்து, அவருக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.