டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி... சிகிச்சை தர மறுத்த 5 ஹாஸ்பிடல்களுக்கு டெல்லி அரசு அதிரடி நோட்டீஸ்!
டெல்லி: டெல்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 5 மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து மத்திய சுகாரத்துறை அமைச்சகமும் டெல்லி அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள லாடோசரை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் வசித்தவர் லட்சுமி சந்திரா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி பெயர் பபிதா ராவுத்.
இவர்களது 7 வயது மகன் அவினாஷ் சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவனை அங்குள்ள சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் அவினாஷ் கடந்த 8-ந் தேதி பத்ரா மருத்துவமனையில் இறந்து விட்டான். அதன் பிறகு ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த லட்சுமி சந்திரா-பபிதா தம்பதியர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மூல்சந்த், மேக்ஸ் சாகேத், ஆகாஷ் ஹாஸ்பிடல், சாகேத் சிட்டி ஹாஸ்பிடல் மற்றும் ஐரீன் ஹாஸ்பிடல் ஆகிய 5 மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததற்காக உங்கள் மருத்துவமனைக்கான அனுமதி பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் டெல்லி அரசிடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கோரியுள்ளது.