டெல்லி: போலீஸ் மீது நடவடிக்கை: முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்
டெல்லி: டெல்லியில் மால்வியா நகர் காவல்நிலைய அதிகாரிகள் இருவர், விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டதால், தங்களது போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி முடித்துக் கொண்டுள்ளது.
டெல்லி காவல்துறையில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மியின் இந்த போராட்டம் மத்திய அரசுடனான நேரடி மோதலாகவே பார்க்கப்படுகிற நிலையில், தங்களது இரு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார் கெஜ்ரிவால். மேலும் டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும் எனவும் எச்சரித்தார்.
துணை நிலை ஆளுநர் உத்தரவு
மால்வியா நகர் போலீசாரின் செயல்பாடு குறித்த நீதிவிசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட்ட டெல்லி துணை நிலை ஆளுநர், அந்த விசாரணை முடியும் வரை, காவல்நிலையத்தின் இரண்டு அதிகாரிகளும் விடுமுறையில் செல்ல உத்தரவிட்டார்.
போராட்டம் வாபஸ்
இதன்பின்னர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்த டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், குடியரசு தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தங்களது இரண்டு நாள் போராட்டத்தை கைவிடுவதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலும் அவரது அமைச்சரவை சகாக்களும் வீடு திரும்பினர்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி
இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: "இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில முதல்வரும் அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கிப் போராடியதில்லை. மக்களுக்காக நாங்கள் முதன்முறையாகப் போராடினோம். அதற்குக் கிடைத்த ஆதரவைக் கண்டு மத்திய அரசு ஆட்டம் கண்டுவிட்டது.
முயற்சி தொடரும்
சர்ச்சைக்குரிய மாளவியா நகர், பஹர்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை முடியும்வரை இருவரையும் விடுப்பில் செல்ல துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மற்ற காவலர்கள் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுப் போராட்டத்தை முடித்துக் கொண்டோம். டெல்லியில் நடைபெறும் குற்றங்களுக்கு தலைநகர போலீஸ் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் கோரிக்கையில் ஒரு பகுதி மட்டும் ஏற்கப்பட்டிருக்கலாம். ஆனால், போலீஸ் பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தொடரும்' என்றார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தும் போராட்ட நிலவரம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் விளக்கினார்.