மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்ணை பலாத்காரம் செய்தாலும் அது பலாத்காரம் இல்லை: ஹைகோர்ட்
டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பளித்த பிரதீப் நந்திரஜோக், முக்தா குப்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 65 வயது பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று கூறிவிட்டது.
பிறப்புறுப்பில் மட்டுமே காயமுள்ளதையும், உடலின் பிற பகுதிகளில் காயமில்லாததையும் சுட்டிக்காண்பித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. மேலும், மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்ணிடம் அவரது சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வக்கீல் கொலீன் கொன்சல்வஸ் கூறுகையில், பலாத்காரம் நடைபெறவில்லை என்று கூற கோர்ட்டுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், மாதவிடாய் குறித்த கருத்து இந்த வழக்கில் தேவையில்லாதது, துரதிருஷ்டவசமானது என்றார். இந்த தீர்ப்பு, பலாத்கார சட்டம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.