தீர்வு கிடைக்கும் வரை ஸ்டிரைக் தொடரும்.. டெல்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்
டெல்லி: நிரந்தர தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தத்தை கைவிடப் போவது இல்லை என்று டெல்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து டெல்லி மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் என்ஜினியரிங் பிரிவு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதியம் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தங்களுக்கு ஊதியம் கிடைத்துவிட்டதாகக் கூறி ஆசிரியர்களும், டாக்டர்களும், என்ஜினியர்களும் பணிக்கு திரும்பிவிட்டனர்.
துப்புரவு தொழிலாளர்கள் மட்டும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் துப்புரவு தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ராஜேந்திர மேவதி கூறுகையில்,
ஊதிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணாமல் பணிக்கு திரும்ப மாட்டோம். கடந்த ஓராண்டில் 4 முறை வேலை நிறுத்தம் செய்துள்ளோம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நீதிமன்றத்திடம் கேட்போம் என்றார்.
கடந்த 3 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்காததால் தான் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.