டெல்லியில் ஜன.1 முதல் 15 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு !
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஓடும் கார்கள், பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் டீசல் மூலம் இயங்குவதாலும், அவற்றில் பெரும்பாலானவை 10 ஆண்டுகளை கடந்து பழுதடைந்த நிலையில் ஓடுவதாலும் இந்த மாசு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இதனை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இரட்டைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
ஜனவரி மாதம் சோதனை முறையில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகையால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கும் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில பள்ளி கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்படுகிறது. எனவே ஜனவரி 1 முதல் 15 வரை விடுமுறை விடப்பட்டால், மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.