ஏடிஎம், வங்கி வாசலில் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் சாவுக்கு விதைபோட்ட நாள், இன்று
டெல்லி: பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு ஓராண்டு ஆகியுள்ளது. நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது, மக்கள் மத்தியில் ஒரே கொந்தளிப்பு.
உடனடியாக மக்கள் ஏடிஎம்களை நோக்கி ஓடினர். நள்ளிரவு நேரத்திலும், மக்கள் ஏடிஎம்கள் வாசலில் பிச்சைக்காரர்களை போல நின்றனர். கியூவில் நிற்க சண்டை போட்டனர். அன்றைய இரவு ஒரே அமளியுடன் கழிந்தது.
அடுத்தடுத்த நாட்களில் வங்கி திறக்காது என்ற அறிவிப்பு காரணமாக மக்கள் பணப்பற்றாக்குறையால் தெருத்தெருவாக அலைந்தனர்.
ரேஷன் வினியோகம்
இதன்பிறகு ஏடிஎம்கள் திறக்கப்பட்டபோதிலும், அதில் பணம் இல்லை. பணத்திற்காக மக்கள் ஒவ்வொரு ஏடிஎம்களாக அலைந்தனர். பணம் இருக்கும் ஏடிஎம்களில் ஒரு நபருக்கு இவ்வளவுதான் என்ற ரேஷன் வினியோக முறையில் பணம் கிடைத்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஸ்வைப் மெஷின்கள் இல்லை
ஸ்வைப் மெஷின்கள் அதிகப்படியான கடைகளில் கிடையாது என்பதால் அதை வைத்தும் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். பகல் நேரத்தில் திறந்திருக்கும் ஏடிஎம்கள் வாசலில் வேலைக்கு செல்வோர் நிற்க முடியாது என்பதால் வீட்டிலுள்ள முதியவர்களை பணம் எடுக்க அனுப்பினர்.
கூட்டமோ கூட்டம்
பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் வங்கிகள் முன்பாகவும் கூட்டம். கூட்டம், கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். பணக்காரர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக வந்து, மேலாளர்களை கைக்குள் போட்டு பணத்தை மாற்றிச் செல்ல, ஏழைகளோ, வங்கிகளின் முன்னால் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் காத்திருந்தனர்.
100 பேரை கொன்ற சம்பவம்
இப்படிப்பட்ட பெரும் கொடுமையால், முதல் 10 நாட்களிலேயே 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் முதியவர்கள். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்டோர் கியூ காரணமாக உயிரிழந்த அவலம் அரங்கேறியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகே நிலைமை சீரடைந்தது. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்வின் தொடக்கப்புள்ளி கடந்த ஆண்டு இன்றைய தினத்தில் வைக்கப்பட்டது.