ரூபாய் நோட்டு விவகாரத்தில் புரிந்து கொள்ளாமல் பேசும் ராகுல்- நிர்மலா சீத்தாராமன் சாடல்
டெல்லி: 500,1000 அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாமல் செல்லாது என அறிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி புரிதல் இல்லாமல் பேசி வருவதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
ராகுல் குற்றச்சாட்டு தவறானவை
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ராகுல் புரிந்துகொள்ளவில்லை . ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு முன், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை; இதுதொடர்பான தகவல் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டது என்று பிரதமர் மோடி மீது ராகுல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறானவை.
புரியாமல் பேசும் ராகுல்
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல், ராகுல் பேசுகிறார். உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்று கடைசி நாளாகும்
இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள இன்று கடைசி நாளாகும். இனிமேல் ரிசர்வ் வங்கிக்கு சென்று அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகளில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் விமர்சனம்
முன்னதாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்து, பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைதான், உலகிலேயே பொருளாதார ரீதியில் முன்னேற்பாடின்றி எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.