நேற்று வரை ஆர்ப்பாட்டம், இன்று ஆழ்ந்த அமைதி: பெங்களூர் சிறை லைவ் ரிப்போர்ட்
பெங்களூர்: நேற்றுவரை பெரும் ஆர்ப்பரிப்புடன் இருந்த பெங்களூர் மத்திய சிறைச்சாலை சுற்றுப்புர பகுதிகளில் இன்று அமைதி திரும்பியது. தொண்டர்கள் இன்றி சிறை அமைந்திருக்கும் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த மாதம் 27ம்தேதி முதல் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறை சென்ற மறுநாள் முதல், ஆண் மற்றும் பெண் அதிமுக தொண்டர்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து மத்திய சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டம், மொட்டையடித்தல், ஒப்பாரி வைத்தல் போன்றவற்றை நடத்தினர்.
தசரா விழாவின்போது இரு நாட்கள் சொந்த ஊர்களில் பண்டிகை கொண்டாட தொண்டர்கள் சென்றதால் சற்று வெறிச்சோடி காணப்பட்ட சிறைச்சாலை பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் களைகட்டியது. அதிலும், நேற்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியதால் 1500 போலீசாரை பாதுகாப்புக்கு குவிக்க வேண்டிய நிலை காவல்துறைக்கு ஏற்பட்டது.
இடையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக வெளியான தகவலால், சிறை அருகே பட்டாசு வெடித்தும் அமர்க்களப்படுத்தினர் அதிமுக தொண்டர்கள். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானதும், சிறிது நேரம் அங்கேயே அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். மீடியாக்காரர்கள் இதை புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டனர்.
மீடியாக்காரர்கள் சென்ற பிறகே நேற்றிரவே சிறை பகுதியில் குவிந்திருந்த தொண்டர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இன்று காலை முதல் தொண்டர்கள் இன்றி சிறை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஜெயலலிதா சிறைக்குள் யாரையும் சந்திக்க மறுத்துவிட்டதால், விஐபிகளும் வருவதில்லை. எனவே தினமும் சிறைக்கு வெளியே டியூட்டி பார்க்கும் மீடியா நிருபர்களும் இன்று மதியம் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, வேறு அசைன்மென்ட்டுகளை பார்க்க சென்றுவிட்டனர். போலீசாரும் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.