அனகோண்டாவை விட பெருசாம்.. அம்மாடி.. கோயிலில் 40 அடி மலைப்பாம்பு.. ரிஷியின் உருவமாக வழிபடும் மக்கள்
போபால்: மத்தியப் பிரதேசத்தின் கோயில் ஒன்றில் வசித்து வரும் மலைப்பாம்பை மக்கள் பக்தியுடன் வணங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீண்ட நாட்களாக இந்த பாம்பு கோயிலில் வசித்து வருவதாகவும், அது முனிவர் ஒருவரின் ஆன்மா என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அதேபோல இந்த பாம்பு பக்தர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்ன
மலைப்பாம்பு
மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதியில் ஹர்சித்தி மாதா தேவி கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. மற்ற கோயில்களை போன்று இது இருந்தாலும் இந்த கோயிலில் பாம்புகள் அதிக அளவு சுற்றித்திரிவதால் கோயில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால் கோயிலின் சன்னிதியில் வழக்கமாக மலைப்பாம்பு ஒன்று அடிக்கடி காணப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த பாம்பு இக்கோயில் வாழ்ந்த ரிஷியின் உருவம் என மக்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது, இதுவரை இப்பாம்பு யாரையும் தீண்டியதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பெயர்
இந்த பாம்புக்கு 'அஜ்கர் தாதா' என்று பெயரிட்டுள்ள பக்தர்கள் பாம்பின் முழு உருவத்தையும் யாரும் பார்த்ததில்லை என்றும், ரிஷியின் அவதாரமாக இருப்பதால் இந்த பாம்பு தென்படுவது நல்ல சகுனம் என்றும் கூறி பாம்பை வழிப்பட்டு வருகின்றனர். இது குறித்து கோயிலின் பூசாரி கூறுகையில், "இந்த பாம்பு சுமார் 40 அடி வரை இருக்கும். ஆனால் யாரும் முழு உருவத்தை பார்த்ததில்லை. இக்கோயிலில் வாழ்ந்த ரிஷி மிகவும் சாதுவான குணம் கொண்டவர். அவரின் சாயலாக உள்ள இந்த மலைப்பாம்பும் சாதுவான குணம் கொண்டது.
நாகராஜா
கோயிலில் 10 அடி நீளத்தில் நாகப்பாம்புகள் பல சுற்றித்திரிகிறது. ஆனால் இவையாவும் யாருக்கும் எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. எனவே இந்த பாம்புகளை நாங்கள் பல ஆண்டுகளாக வணங்கி வருகிறோம்" என பூசாரி புஷ்பேந்திர மகாராஜா கூறியுள்ளார். இந்தியாவில் பாம்புகளை வழிபடும் பழக்கம் காலம் காலமாக நீடித்து வருகிறது. 'நாகராஜா' எனும் பெயரில் பாம்புகள் வழிப்படப்படுகின்றன. நாக தோஷம் நீங்க இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
பாம்பு வழிபாடு
பொதுவாக ஜாதகத்தில் சந்திரனுக்கு முன் அல்லது பின் ராகு நின்றால் அவருக்கு நாக தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது 12வது கட்டத்திலோ ராகு இருந்தாலும் அவருக்கு நாக தோஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. நாக தோஷம் இருப்பவர்களில் சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்றும், பலருக்கு குடும்ப சிக்கல்கள், குழந்தை பேறு பிரச்னை உள்ளவை இருப்பதாகவும், எனவே உரிய பரிகாரம் செய்தால் இதிலிருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக பாம்புகளையும் சிலர் வழிபடுகின்றனர்.