உக்ரைன் வழியே பறக்கவில்லை என்கின்றன ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா- ஆம் என்கிறது சாட்டிலைட்
டெல்லி: மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்பட்ட அன்று உக்ரைன் வழியாக தங்களின் விமானங்கள் செல்லவே இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
நெதர்லாந்தில் இருந்து மலேசியா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. மலேசிய விமானத்திற்கு மிக அருகில் ஏர் இந்தியா விமானம் சென்றது என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் உக்ரைனில் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்தே அந்த வழியாக தங்கள் நிறுவன விமானங்கள் செல்வது இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா
மலேசிய விமானம் அருகே ஏர் இந்தியா விமானம் எதுவும் செல்லவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள்
விமானங்கள் செல்லும் வழியை செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்கும் இணையதளங்களில் மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்படுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு அந்த வழியாக ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராடார்
ஜெட் ஏர்வேஸ் விமானம் 9டபுள்யூ119 ஜூலை 17ம் தேதி காலை 8.39 மணிக்கு லண்டனில் இருந்து மும்பை கிளம்பி உக்ரைன் வழியாக சென்றதாக ராடார் கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா
சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஏர் இந்தியா விமானம் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொய்
அப்படி என்றால் உக்ரைன் வழியாக செல்லவே இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சொல்வது உண்மை இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.