லாரி ஓனர்ஸ் ஹேப்பி அண்ணாச்சி! டீசல் விலையை குறைக்கப் போறாங்களாம்
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் விலை நாடு முழுவதும் சராசரியாக ஒரு ரூபாய் அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அடுத்ததாக டீசல் விலை ரூ.2.5 குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக விலையேற்றப்பட்ட டீசலால், எண்ணை நிறுவனங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நிருபர்கள் கேட்டபோது, "தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. எனவே இப்போது எதையும் கூற முடியாது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்" என்றார்.
டீசல் விலை குறைக்கப்பட்டால் கடந்த நான்காண்டுகளில் முதன்முறையாக, அதைச் செய்த பெருமை மத்திய அரசுக்கு கிடைக்கும். டீசல் விலை குறையும்பட்சத்தில் லாரி உரிமையாளர்களுக்கு பெருமளவு பணம் மிச்சப்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.