பாரபட்சம்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது டெல்லியில் திமுக- காங். புகார்
டெல்லி: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பாரபட்சமாக நடந்து கொள்வதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியிடம் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் நஜீம் சைதியை இன்று சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பாரபட்சமாக நடந்து கொள்கிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு, குலாம்நபி ஆசாத், இளங்கோவன் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மாவட்ட தலைநகரங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கரூர், சென்னை, ஊத்தங்கரையில் ஏராளமான பணம் பிடிபட்டது. வெள்ளி கொலுசுகளும் தங்க நகைகளும் ஏராளமான அளவில் பிடிபட்டுள்ளன.
இது தேர்தலுக்காக பட்டுவாடா செய்தவற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநில டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜிகளை வரவழைத்து பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.