சபரிமலை பக்தர்களிடம் கனிவாக நடக்க வேண்டும்: போலீசாருக்கு கேரள ஹைகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்களிடம் அங்கு பணியில் உள்ள போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேரள ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை போலீசார் மிகவும் தரக் குறைவாக நடத்துவதாகவும், அதிக கெடுபிடி காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சபரிமலை வரும் பக்தர்களிடம் போலிசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கேரள ஹைகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
பக்தர்கள் கூட்டம்...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவில் இருக்கும். இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறி சென்று சுவாமி அய்யப்பனை தரிசிப்பார்கள்.
அனுமதியில்லை....
மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை சபரிமலையிலும், மாளிகைபுரத்து அம்மன் கோவிலிலும் சுத்தி பூஜை நடைபெறுகிறது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு பதினெட்டாம்படி ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தெரிவித்துள்ளார்.
வழக்கு....
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப் படும் போலீசார் தங்களின் பணியில் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், பதினெட்டாம்படி ஏறும் பக்தர்களை பிடித்து தள்ளி விடுவதாகவும் கேரள ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு....
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை வரும் பக்தர்களை போலீசார் கனிவுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், பக்தர்களின் வாகனங்களை சோதனை செய்யும்போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பக்தர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.
மருத்துவ முகாம்...
அதிகரித்து வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சார்பில் பம்பையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் மலையேர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
பலத்தப் பாதுகாப்பு...
சிறிய நோய் தாக்குதலுக்கு உள்ளான பக்தர்களுக்கு அந்த மருத்துவ முகாமிலேயே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.