" ஹர ஹர " கோஷத்தால் சர்ச்சை - ஆதரவாளர்களுக்கு மோடி கட்டளை!!
டெல்லி: "ஹர ஹர மோடி" என்று பாஜக தொண்டர்கள் எழுப்பும் முழக்கங்களுக்கு சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஹர ஹர கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கட்டளையிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா பொதுக்கூட்டங்களில் "ஹர ஹர மோடி" என்ற கோஷம்தான் இப்போது ஹைலட்டாக இருந்து வருகிறது. இந்த முழக்கத்துக்கு துவாரகா மற்றும் காசி சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திடமும் சங்கராச்சாரியார்கள் எடுத்துச் சென்றனர்.
அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயில்களில் இருந்த சிவலிங்கத்தை எடுத்துவிட்டு நரேந்திர மோடி புகைப்படத்தை வைத்து பூஜை செய்வதற்கும் சங்கராச்சாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவபெருமானை வழிபடும்போதுதான் ஹர ஹர மகாதேவா என்று சரணகோஷம் எழுப்புவோம்.. ஆனால் இதுபோன்ற தனி மனித வழிபாட்டை உடனே நிறுத்த வேண்டும் என்றும் சங்கராச்சாரியார்கள் கேட்டுக் கொண்டனர்.
தற்போது மோடிக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் துவாரகா சங்கராச்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்குக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மேலும் பாஜகவினரின் இந்த முழக்கம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, உற்சாகமிகுதியால் சில ஆதரவாளர்கள் 'ஹர ஹர மோடி" என்று முழக்கமிடுகின்றனர். அவர்களது உற்சாகத்தை மதிக்கிறேன். அதே நேரத்தில் இத்தகைய முழக்கங்களை எதிர்காலத்தில் எழுப்ப வேண்டாம் என்றும் ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில் உள்ள காசி சங்கராச்சாரியாரும் கூட மோடிக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.