'சரக்கு அடிப்பது' அடிப்படை உரிமை, கவுரவத்தின் அடையாளம்... பா.ஜ.க. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
போபால்: மது அருந்துவது அடிப்படை உரிமை; சமூக அந்தஸ்தின் அடையாளம் என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மது விற்பனை நேரம் இரவு 10 மணியிலிருந்து 11:30 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பாபுலால் கவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மது அருந்துவோரால் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாக கூற முடியாது. காரணம், மது அருந்தியதும் ஒருவர் தனது சுயஉணர்வை இழந்துவிடுகிறார்; பிறகு எப்படி அவர் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும்?
அளவோடு மது குடிப்பவரால் எந்த குற்றமும் நிகழ்வதில்லை. எனவே, யாரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தக் கூடாது. மது அருந்துவது ஒருவரின் அடிப்படை உரிமையாகும். இன்றைய காலகட்டத்தில் அது சமூக அந்தஸ்தின் அடையாளமாகும்.
இவ்வாறு பாபுலால் கவுர் கூறினார்.
இதே பாபுலால்தான், தமிழகத்தில் பெண்கள் முழுமையான உடை அணிவதால், பிற மாநிலங்களைவிட அங்கு பாலியல் குற்றங்கள் குறைவாக நடைபெறுகின்றன என்றும், பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது சில நேரங்களில் சரியானது; சில நேரங்களில் தவறானது என்றும் கூறி பல சர்ச்சைகளில் சிக்கியவரும் இதே பாபுலால் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.