"எப்ப தான் வீட்டுக்கு போவோமோ....." - குமுளியில் சிக்கித் தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபரிமலையிலிருந்து தமிழகம் திரும்ப முடியாத நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
Recommended Video

கேரளா: போக்குவரத்து சங்க ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் திரும்ப முடியாமல் ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளதாகவும், இந்த ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் அரசின் வார்த்தைகளை நம்ப தயாராக இல்லாத போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தால் சிறுவியாபாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
குமுளியில் தற்போது சிக்கியுள்ள பக்தர்கள் முறையான போக்குவரத்து வசதியில்லாததால் பேருந்து நிலையத்திலேயே தங்கி வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து நிலையங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும் ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட்டுகளை பல நூறு ரூபாய்களை ஏற்றி விற்பதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் தொடர்ந்தால் பெரும் நெருக்கடி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications