நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக அமலாக்க பிரிவு விசாரணை துவக்கம்
டெல்லி: சோனியா காந்தி குடும்பத்தார் மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் முதல் கட்ட விசாரணையை அமலாக்க பிரிவு துவங்கியுள்ளது.
"நேஷனல் ஹெரால்ட் சொத்தை வாங்கியதில் சோனியா, ராகுலை பங்குதாரர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் முறைகேடு செய்துள்ளது. இதன் மூலம் சோனியா குடும்பத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்துள்ளது" என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து கோர்ட் சோனியா, ராகுல் மற்றும் யங் இந்தியா பங்குதாரர்கள் நால்வரும் ஆகஸ்ட் 7ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பணமோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியுடையதுதானா என்பதை அமலாக்க பிரிவு ஆய்வு செய்துவருவதாக அத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வருமான வரித்துறையும் இதே வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இது 2008ம் ஆண்டு மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.