ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கப்பிரிவு அதிகாரி ராஜேஷ்வர்சிங்கின் இடமாற்றத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரிடம் ஓரிருநாட்களில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததற்கு ஆதாயமாக கலைஞர் டிவி ரூ200 கோடி பெற்றது என்ற புகாரில் அமலாக்கப் பிரிவு அண்மையில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த ரூ200 கோடி பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நிகழ்ந்துள்ளது என்கிறது அமலாக்கப் பிரிவு
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஏர்செல்- மேக்சிஸ் வழக்கும் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம் என்று சிபிஐ தெரிவித்தது.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜேஷ்வர்சிங், உத்தரபிரதேசத்துக்கு திடீரென இடம் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் ராஜேஷ்வர்சிங்கை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிகிறவரை புலன் விசாரணையை ராஜேஷ்வர்சிங் தொடருவார் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications