சரியா இருக்கே, வேட்புமனுவை நிராகரித்தது ஏன்.. கோர்ட்டுக்கு போறேன்.. மாஜி ராணுவ வீரர் தேஜ் பகதூர்
வாரணாசி: வாரணாசி மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கிய, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என குறை கூறி, வீடியோ வெளியிட்டவர் தான் இந்த தேஜ் பகதூர் யாதவ். ராணுவத்தை குறை கூறி வீடியோ வெளியிட்டதற்காக இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பகதூர் யாதவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். ராணுவத்துறையில் நடைபெற்று வரும் ஊழலை அம்பலப்படுத்தியதால் தான் என்னை பணிநீக்கம் செய்தனர். எனவே தான் பிரதமரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தேன் என கூறியிருந்தார்.
இவ்விகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாய்க்கு வாய் நாடு, நாட்டு மக்கள், ராணுவ வீரர்களின் நலன்களை மட்டுமே யோசிப்பதாக கூறும் மோடிக்கு எதிராக, முன்னாள் ராணுவ வீரர் அதுவும் ஊழலை அம்பலப்படுத்தியவர் களமிறங்கியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
இதற்கும் மேலாக தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இந்நிலையில் சமாஜ்வாதியின் வேட்பாளராக களமிறங்கிய தேஜ் பகதூரின் வேட்புமனுவை, வாரணாசி தொகுதியில் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக தேஜ் பகதூர் தரப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரி கேட்ட அனைத்து ஆவணங்களையும் நேற்று தாக்கல் செய்துவிட்டதாகவும், அப்படி இருந்தும் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது தவறான செயல் என்றும் தேஜ் பகதூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.