ஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகள் கம்பியால் அடித்து படுகொலை.. ஹரியானாவில் மாஜி ராணுவ வீரர் வெறிச்செயல்
டெல்லி: ஒரு மணி நேரத்தில் 6 பேரை கம்பியால் அடித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரால் ஹரியானா மாநிலத்தின் பல்வால் நகரில் பதற்றம் நிலவியது.
இந்த கொலைகள் அனைத்தும், அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் நடந்துள்ளன. கொலையாளியை ஒருவழியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர், நரேஷ்குமார் என தெரியவந்தது. மருத்துவமனையொன்றில் பெண்ணை அடித்து கொன்ற நரேஷ்குமார், வரிசையாக அடுத்த 5 பேரை பல்வால் நகரின் பல பகுதிகளிலும் வேட்டையாடியுள்ளார்.

மருத்துவமனையின் முதல் தளத்திலுள்ள ஐசியூ வார்டில் தனது மைத்துனி பேறுகாலத்திற்காக வந்திருந்த 35 வயது பெண்ணை கம்பியால் அடித்து கொன்று தப்பியோடிய நரேஷ்குமார், அங்கிருந்து அதிகபட்சம் 3 கி.மீ தூரத்திற்குள் அடுத்த 5 பேரையும் அடுத்தடுத்து அடித்து கொலை செய்துள்ளார்.
நரேஷ்குமாரை பிடிக்க முயன்ற போலீசாரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் போராடி அவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. முன்னதாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தால் அதிகாலை முதல் பல்வால் நகரில் பெரும் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications