பாஜகவின் முன்னாள் நிதியமைச்சரை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்... கலகத்தில் பாஜக
கொல்கத்தா: வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.
அதற்கு ஏற்றவாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய தலைவர்களையும் பாஜக தன்வசம் இழுத்து வருகிறது. திணாமுல் காங்கிரசில் முக்கிய தலைவர்களாக இருந்த சுவேந்து ஆதிகாரி, ராஜீப் பானர்ஜி ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
இப்போது பெரிய ட்விஸ்ட்டாக வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கொல்கத்தாவிலுள்ள கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர்கள் டெரெக் ஓ பிரையன், சுதீப் பந்தோபாத்யாய், மற்றும் சுப்ரதா முகர்ஜி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 83 வயதாகும் யஷ்வந்த் சின்ஹா, கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
மோசமான சூழ்நிலை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பேசிய யஷ்வந்த் சின்ஹா, "முன்னெப்போதும் இல்லாத ஒரு மோசமான சூழ்நிலையை நம் நாடு எதிர்கொள்கிறது. ஒரு ஜனநாயகத்தின் வலிமையே அங்கு சுயமாக இயங்கும் நிறுவனங்களில்தான் உள்ளது. ஆனால், இப்போது நீதித்துறை உட்பட சுயமாக இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும் பலவீனமாகிவிட்டன" என்றார்.
தனித்து விடப்பட்டுள்ளது
தொடர்ந்து வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜகவையும் தற்போதுள்ள பாஜகவையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், "இப்போது அரசு செய்யும் தவறுகளைத் தடுக்க யாரும் இல்லை. வாஜ்பாய் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது, ஆனால் இன்றைய அரசு வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுகிறது. பல கூட்டணிக் கட்சிகளும் பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டன. இப்போது பாஜகவிற்காக யாரும் இல்லை" என்று பேசினார்.
யார் இந்த யஷ்வந்த் சின்ஹா
மேலும், தேர்தல் ஆணையம்கூட தற்போது சுயமாகச் செயல்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார். 1960ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, 1984ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் ஜனதா கட்சியிலிருந்த அவர், பின் பாஜகவில் இணைந்தார். 1990ஆம் ஆண்டு பிரதமர் சந்திர சேகர் அமைச்சரவையில் இவருக்கு முதலில் நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் சின்ஹா இருந்தார்.