ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர் என்று நம்ப இதுதான் காரணம்.. சிபிஐ மாஜி இயக்குநர்!
டெல்லி: ஆருஷியின் பெற்றோர்தான் கொலையாளிகள் என நம்ப ஒரு காரணத்தை சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார் (14), 2008ல், தன் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அதே வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த, ஹேம்ராஜ் என்ற 45 வயது வேலைக்காரர், வீட்டின் மொட்டைமாடியில், ஹேம்ராஜ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது மறுநாள் தெரியவந்தது.
விடுதலை
இந்த வழக்கின் விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2013 நவம்பர் 26ல், ராஜேஷ் தல்வார் மற்றும் நுாபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. அப்போது ஆதாரங்கள் இல்லாமல், சந்தேகத்தின்பேரில் குற்றவாளிகள் என ஆருஷி பெற்றோரை அறிவிக்க முடியாது என கூறி அவர்களை விடுதலை செய்தது.
Recommended Video
முன்னாள் இயக்குநர் தகவல்
இதுகுறித்து ஆருஷி வழக்கு விசாரணையின்போது சிபிஐ அமைப்பின் இயக்குநராக பணியாற்றிய, ஏ.பி.சிங் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளதாவது: ஆருஷியின் பெற்றோரை நிரபராதிகள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சொல்லவில்லை. சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளித்த விடுதலை செய்வதாக கூறியுள்ளது.
விசாரணையில் குளறுபடி
விசாரணையில் அதிகப்படியான, ஓட்டைகள் இருந்தன. போலீசார் வழக்கை சிபிஐக்கு வழங்கியபோதும் சரி, சிபிஐ வழக்கை விசாரித்தபோதும் நிறைய விதிமுறைகள் மீறப்பட்டன. ஹேமராஜ் கொலையாகி கண்டெடுக்கப்பட்ட மொட்டை மாடியில் மீடியாக்கள் எளிதாக செல்ல அனுமதிக்கப்பட்டது. நிறைய விஷயங்கள் மீடியாக்களில் லீக் ஆகின.
இதுதான் அந்த காரணம்
ஆருஷி உடல் இருந்த அறையில் ஹேமராஜின் ரத்தம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு முக்கிய வாதமாக முன் வைத்தது. ஆனால், இவ்வாறு ரத்தத்தை சுத்தப்படுத்தி, குற்றம் நடைபெற்ற இடத்தின் அமைப்பையே மாற்ற வேண்டிய தேவை வேறு எந்த கொலைகாரர்களுக்கும் தேவையில்லையே. அப்படி உடலை வெவ்வேறு இடங்களில் போட வேண்டிய தேவை, ராஜேஷ் தல்வார் தம்பதிக்குதானே இருந்திருக்க வேண்டும். இதுதான், அவர்கள் மீதான சந்தேகத்திற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேநேரம், ஏன் அவர்கள் அப்படி உடலை வெவ்வேறு இடங்களில் போட வேண்டிய தேவை ஏற்பட்டது என்று கேட்டபோது, அதுகுறித்து அவர் பதில் அளிக்கவில்லை. தல்வார் தம்பதிகள் பற்றி ஆதாரமே இல்லாமல் அதீத கற்பனை அடிப்படையில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று அலகாபாத் ஹைகோர்ட் தனது தீர்ப்பில் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.