ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம்: நாடு முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம்
டெல்லி: ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக இந்திய முன்னாள் ராணுவத்தினர் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அனில் கவுல் கூறியதாவது:
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் உறுதியளித்து, ஒரு வருடம் கடந்து விட்டது. இன்னமும் அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றார் அவர்.

தாங்கள் எந்த அரசுக்கும் எதிரானவர்கள் இல்லையென்றும், தங்களுடைய நீண்ட நாளைய கோரிக்கையை வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 22 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும், போரில் கணவனை இழந்த 6 லட்சம் பெண்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அகில இந்திய வானொலியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியபோது, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். எனவே, முன்னாள் ராணுவத்தினர் பொறுமை காக்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications