சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர்
பெங்களூரு: என் மகனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும். இல்லையென்றால், தாங்கள் அனைவரும் தற்கொலை செய்வோம் என்று மர்ம மரணமடைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் பெற்றோர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேர்மை என்றைக்கு தோற்க கூடாது என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் தாரக மந்திரமாக இருக்கிறது. எனவேதான் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் மரணத்திற்கு நீதிகேட்டு இன்றைக்கு பல லட்சக்காண மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.
ரவியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட வேண்டும்; அவரது இறப்பு தொடர்பான வதந்திகளை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரவியின் பெற்றோர்களும், உறவினர்களும் பெங்களூர் விதான்சவுதா முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரவியின் பெற்றோர்களுக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் களமிறங்கியுள்ளனர். ரவியின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை கோரியுள்ள அவர்கள் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
கண்ணீர் அஞ்சலி
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி, திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அரசு மரியாதையுடன் அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கதறி அழுத செல்லப்பிராணி
ரவியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த போது அவரின் குடும்பத்தினர் கலங்கியதைப் பார்த்து அவர் செல்லமாக வளர்த்த நாயும், கதறி அழுதது, அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. இந்த புகைப்படம், 'ட்விட்டரில் வெளியானதை பார்த்து, நாடு முழுவதும் உள்ள மனிதநேயம் படைத்தவர்களின் கண்களும் குளமாகின.
சி.பி.ஐ விசாரணை தேவை
இந்த நிலையில், ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடக் கோரி, சட்டப்பேரவை, மேலவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, சி.ஐ.டி விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
2வது நாளாக அமளி
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனாலும், விதான செளதாவில் இரவு முழுவதும் பாஜக, மஜத உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இரு அவைகளும் புதன்கிழமை காலையில் தொடங்கியதும் பேரவை, மேலவைத் தலைவர்களின் இருக்கைகளுக்கு முன் திரண்ட எதிர்க்கட்சியினர், அதிகாரி ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முழக்கங்களை எழுப்பினர். தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.
பெற்றோர் போராட்டம்
இதனிடையே சிபிஐ விசாரணை கோரி ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் பெற்றோர் கரியப்பா, கௌரம்மா, உறவினர்கள் புதன்கிழமை பிற்பகல் பெங்களூரு விதானசௌதா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, சிஐடி விசாரணை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை அளித்தார். ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து ரவியின் பெற்றோர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் குமாரசாமி, ஜெகதீஷ்ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆகியோர், நாங்களும் உங்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம் என்றனர்.
என் மகன் கோழையல்ல
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவியின் தந்தை கரியப்பா, தற்கொலை செய்வதற்கு என் மகன் கோழை அல்ல; நேர்மையான அதிகாரி என்பதால், அவனை கொலை செய்து விட்டனர். இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ.,யிடம் இந்த வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே, விசாரணை நேர்மையாக நடக்கும். சி.பி.ஐ.,யிடம் விசாரணையை ஒப்படைக்காவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார்.
மிகப்பெரிய போராட்டம்
பெங்களூரைச் சேர்ந்த ஏராளமானோர்,'ரவியின் மரணத்தில், உண்மை வெளியில் வராவிட்டால், ஒட்டுமொத்த பெங்களூரு மக்களும் வீதிக்கு வந்து போராடுவோம்' என, தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு குவியும் மனுக்கள்
இதனிடையே ‘உத்திஷ்ட பாரதா' என்ற சமூக நல அமைப்பு மூலம் 13.58 லட்சம் பேர் இணையதளம் மூலம் பிரதமர் நரேந்திரமோடிக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். அதில் ரவியின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பிரதமருக்கு மனுக்களை அனுப்பிவருகின்றனர்.
அதிகாரி இடமாற்றம்
இதனிடையே கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த சி.ஐ.டி., டி.ஜி.பி., பிரணாப் மொகந்தி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, புதிய சி.ஐ.டி., டி.ஜி.பி.,யாக பிரதாப் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சருடன் சந்திப்பு
கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கவுடா, பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேர்மைக்கு மரியாதை
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்று சில ஆண்டுகாலம் பணிபுரிந்தாலும் நேர்மையான முறையில் மக்களுக்காக சேவை செய்த அதிகாரியின் மரணம் கர்நாடகா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் எதுவுமில்லை. தற்கொலைதான் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மரணத்தில் இருக்கும் உண்மையை கண்டறிந்தால்தான் ரவியின் நேர்மைக்கு மரியாதை செலுத்தியது போலாகும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.